நாய் கடித்தும், வாகனங்கள் மோதியும் இந்தாண்டில் 20 மான்கள் உயிரிழப்பு
- நமது நிருபர் குழு -: செங்கல்பட்டு மாவட்டத்தில், காப்புக்காடுகளில் வசிக்கும் மான்கள் அடிக்கடி வெளியேறி சாலைக்கு வந்து, வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடப் பாண்டில், 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ள நிலையில், வனத்துறை மெத்தனமாக செயல்படுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் 2,896 ஏக்கர் பரப்பிலும், கூடலுார், குமுளி, ஊனமாஞ்சேரி ஆகிய இடங்களில் முறையே 2,728, 1,205, 410 ஏக்கர் பரப்பிலும், அடர்ந்த காப்புக் காடுகள் உள்ளன. இங்கு 1,500க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. பரப்பில் பெரிய வண்டலுார் காப்புக் காட்டில் மட்டும், 1,000க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காப்புக் காட்டிலிருந்து வெளியேறும் மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை உண்டு ஜீரணமாகாமல் உயிரிழப்பதும், தெரு நாய்கள் கடித்து பலியாவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மறைமலை நகர் அடுத்த பனங்கொட்டூர் ஏரியில், கடந்தாண்டு பிப்., 18ம் தேதி, தண்ணீர் குடிக்கச் சென்ற, 2 வயதுடைய புள்ளி மான், சேற்றில் சிக்கி உயிரிழந்தது. கடந்தாண்டு மே 11ம் தேதி அதிகாலை, தண்ணீர் தேடி சாலை பகுதிக்கு வந்த புள்ளி மான், பரனுார் -- மகேந்திரா சிட்டி இடையே ஜி.எஸ்.டி., சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பவுஞ்சூர் அருகே தட்டாம்பட்டு கிராமத்தில் உள்ள மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில், கடந்த 2024 மார்ச் 16ம் தேதி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், புள்ளிமான் ஒன்று பலத்த காயமடைந்தது. பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், மான் உயிரிழந்தது. கடந்தாண்டு டிச., 13ம் தேதி, சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரி அருகே, 6 மாத ஆண் புள்ளி மான் குட்டி, தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தது. கடந்த மார்ச் 25ம் தேதி, கூவத்துார் பகுதியில் உள்ள பகிங்காம் கால்வாய் ஓரத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் புள்ளி மான் உடல் கிடந்தது. அது 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் எனத் தெரிந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு மானை பிடித்து, தலையை மட்டும் துண்டித்து கொலை செய்திருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் சத்யா, வெண்புருஷம் பகுதியைச் சேர்ந்த கோகுலகண்ணன் என்பவருடன் சேர்ந்து, கடந்த நவ., 16ம் தேதி, கல்பாக்கம் அருகே மானை வேட்டையாடி, இறைச்சியை விற்க முயன்றார். இதில், கோகுலகண்ணன் கைது செய்யப்பட்டார். சத்யாவை போலீசார் தேடி வருகின்றனர். அந்த வகையில், இந்தாண்டு மட்டும், 20க்கும் மேற்பட்ட மான்கள் பலியாகி உள்ளன. இதுகுறித்து, விலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் காப்புக் காடுகள், முறையாக பராமரிக்கப் படவில்லை. தவிர, நீர்நிலைகளின் போக்கு கால்வாய் மற்றும் வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா நிலங்களாக மாறிவிட்டன. இதனால், காடுகளில் வாழும் மான்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. எனவே நீர் பருகவும், பசியை போக்கவும், காடுகளிலிருந்து அடிக்கடி கூட்டமாக மான்கள் வெளியேறுவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு வெளியேறும் மான்களில் சில, வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் உயிரிழப்பது தொடர்கிறது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்ததால், மான்கள் உயிரிழப்பு குறித்து வெளியே தகவல் வரக்கூடாது என, மேலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மான்கள் உயிரிழப்பு தினமும் அரங்கேறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.