திருத்தணியில் பீதி கிளப்பிய 20 குரங்குகள் சிறைபிடிப்பு
திருத்தணி:முருகன் கோவிலில் பக்தர்களை பயமுறுத்தி வந்த குரங்குகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து நேற்று பிடித்தனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தேங்காய், வாழைப்பழம் போன்ற பூஜை பொருட்கள் கொண்டு செல்கின்றனர். மலைக்கோவிலில் சுற்றித்திரியும் 75க்கும் மேற்பட்ட குரங்குகள், பக்தர்கள் கொண்டு செல்லும் வாழைப் பழம், தேங்காய் மற்றும் குழந்தைகள் கொண்டு செல்லும் தின்பண்டங்களை பறித்து சென்றது. சில நேரங்களில், குரங்குகள் பக்தர்களையும் கடித்து வந்தது. இதையடுத்து, முருகன் கோவில் நிர்வாகம் மற்றும் திருத்தணி வனத்துறையினர் ஒன்றிணைந்து, மலைக்கோவிலில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, ஆந்திர மாநில வனப்பகுதியில் அவ்வப்போது விடுகின்றனர். அந்த வகையில், நேற்று காலை வனத்துறையினர் மலைக்கோவிலில் கூண்டு வைத்தனர். இந்த கூண்டில் இருந்த வாழைப்பழங்களை சாப்பிடுவதற்கு வந்த, 20 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து, ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள வனப்பகுதியில் குரங்குகளை விடுவித்தனர்.