திருத்தணியில் இருந்து 30 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருத்தணி:பொங்கல் பண்டிகை கொண்டாட வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக, திருத்தணியில் இருந்து, 30 சிறப்பு பேருந்துகள், இயக்கப்படுகின்றன.திருத்தணி வருவாய் கோட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளியூர்களில் இருந்து ஊழியர்கள் தங்கி வேலை செய்கின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் மற்றும் ஊழியர்கள் செல்வதற்கு வசதியாக திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, சிறப்பு பேருந்துகள் நேற்று மாலை முதல், பொங்கல் விழா வரைக்கும் தொடர்ந்து இயக்கப்படுகிறது.இது குறித்து திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொங்கல் பண்டிகையையொட்டி, 14ம் தேதி வரை, திருத்தணி போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு, மொத்தம், 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பயணியர் தேவை அதிகமாக இருப்பின், கூடுதல் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல, 18ம் தேதி முதல், 20ம் தேதி வரை வெளியூர் பயணியர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.