மர்ம நபர்கள் கைவரிசை 46 சவரன் நகை திருட்டு
பெருங்களத்துார் : பழைய பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் தர்மராஜன், 59; கிழக்கு தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய நிறுவனத்தில் செயல்படும் ஒப்பந்த ஊழியர்.இவரது மனைவி அருள்மொழி தேவி, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில், மருந்தக ஊழியர். மகன் அமர்நாத், 25, ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு உள் அலங்கார பணி செய்கிறார்.நேற்று காலை, மூவரும் பணிக்குச் சென்ற நிலையில், வீட்டின் சுற்றுச்சுவர் மேல் ஏறி, மர்ம நபர்கள் உள்ளே குதித்துள்ளனர்.பின், வராண்டா கிரில் கேட்டின் பூட்டையும், தொடர்ந்து, வீட்டின் முன்பக்கக் கதவையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 46 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி, மொபைல் போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.தர்மராஜன், நேற்று மாலை வீடு திரும்பிய நிலையில், திருடு போனது தெரிந்தது. வீட்டு 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவர் வீட்டிற்குள் வந்து சென்றது பதிவாகியிருந்தது.தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.