சுடுகாடு கூரை இடிந்து விழுந்து இறுதி சடங்கிற்கு வந்தவர் காயம்
திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 22. இவர் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் கோடீஸ்வரி, 60. நேற்று முன்தினம் இயற்கை மரணம் அடைந்தார். தாயாரின் இறுதிச்சடங்கிற்காக தனியார் பள்ளி அருகே உள்ள சுடுகாடு பகுதிக்கு கொண்டு வந்தனர். இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்த போது சுடுகாடு கூரையில் ஒருபகுதி சேதமடைந்து பாலாஜியின் தலையில் விழுந்தது. இறுதிச்சடங்கிற்கு வந்தவர்கள் பாலாஜியை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர். பேருராட்சி அதிகாரிகள் சுடுகாடு பகுதியில் ஆய்வு செய்து சீரமைத்து தர வேண்டுமென திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.