குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருவள்ளூர், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் - அமலாக்கம் வெங்கடாசலபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள் சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி தொழிலாளர்களுக்கு, 78 நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை. முறையாக விதிமுறை பின்பற்றாமலும் செயல்பட்ட அந்த நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தேசிய விடுமுறை தினங்களில், தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது வேறு தினத்தில் சம்பளத்துடன்கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.மேலும், சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.