ஓராண்டாக குடிநீர், மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம்
திருத்தணி, கன்னிகாபுரம் இருளர்காலனி மக்களுக்கு, புதிதாக கட்டிய வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வசதி ஏற்படுத்தாமல், ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் இருளர் காலனியில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு அரசின் சார்பில், 2022 - 23ம் ஆண்டு பழங்குடியினர்குடியிருப்பு திட்டத்தின்கீழ், திருத்தணி - மாம்பாக்கசத்திரம் மாநில நெடுஞ்சாலை, பி.சி.என்.கண்டிகை செல்லும் பகுதியில், 32 குடும்பத்தினருக்கு, ரூ.4.50 லட்சத்தில், ஒன்றிய நிர்வாகம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடந்தது.இப்பணிகள் முழுமையாக முடிந்து ஓராண்டாகியும், புதிய வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.ஆனால், பழங்குடியின குடியிருப்பு பகுதிக்கு சிமென்ட் சாலை, தெருமின்விளக்கு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பயனாளிகளுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்து, அதில், எட்டு மாதங்களாக குடியிருந்து வருகின்றனர்.வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாததால், இரவு நேரத்தில் பழங்குடியின மக்கள் கடும் சிரமப்படுவதுடன், வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதுதொடர்பாக, பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், புதிய வீடுகள் இருந்தும், அங்கு வசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என, பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.