உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இயந்திர நெல் நடவுக்கு மானியம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

இயந்திர நெல் நடவுக்கு மானியம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

பள்ளிப்பட்டு,குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பட்டத்தில், இயந்திரம் வாயிலாக நெல் நடவு மேற்கொள்ள அரசு மானியம் அளிக்கிறது. ஆன்லைனில் பதிவு செய்து பயனடைய விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் மற்றும் கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு நடவு பணியை எளிதாக்கும் வகையில், இயந்திர நடவு மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.கடந்த 2021ல் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில், ஆண்டுதோறும் சீரான மழைப்பொழிவு உள்ளது, இதனால், கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பலரும் நெல் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். நடவு பணிக்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைக்காதது, நெல் சாகுபடிக்கு சிக்கலாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக, இயந்திர நடவு ஊக்குவிக்கப்படுகிறது. இயந்திர நடவுக்காக சிறப்பு வகை நாற்றங்கால் அமைக்கவும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு சொர்ணவாரி பட்டத்தில், பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை தாலுகாவில், தலா 400 ஏக்கர் என, மொத்தம் 800 ஏக்கரில் இயந்திர நெல் நடவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகள், வேளாண் விரிவாக்க மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31ம் தேதி. இந்த திட்டத்தின்படி விவசாயிகளுக்கு விதை நெல், நுண்ணுாட்ட சத்து உட்பட 1 ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

வங்கி கணக்கில் மானியம் வரவு

உணவு பயிரான நெல் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், இயந்திர நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியம் அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு நகல், விவசாய நிலத்தின் பட்டா நகல், மொபைல்போன் எண் உள்ளிட்டவற்றை கொண்டு, வேளாண் உதவி மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மானியத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.- -வி.தாமோதரன்,வேளாண் உதவி இயக்குநர், பள்ளிப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி