ஆக்கிரமிப்பை அகற்றிய பா.ஜ., நிர்வாகிக்கு வெட்டு
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த சிறுவானுார் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார், 54; திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர். இவருக்கு பவானி, 45, என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இவர், திருவள்ளூர் பா.ஜ., மேற்கு மாவட்ட செயலராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பவானி, சிறுவானுார் ஊராட்சி தலைவராக உள்ளார்.நேற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாலை சீரமைக்கும் பணி நடந்து வந்தது. இதில், பெண் ஊராட்சி தலைவரின் கணவர் என்ற முறையில் பணிகளை பார்வையிட்ட போது, சாலையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றும் பணி நடந்து வந்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வேலு, 48, என்பவர் ரமேஷ்குமாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த வேலு கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.இதில், தலை உட்பட பல இடங்களில் படுகாயமடைந்த ரமேஷ்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மேல்சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய வேலுவை தேடி வருகின்றனர்.