அங்கன்வாடி அருகே ஆபத்தான அரசு கட்டடம்
ஆர்.கே.பேட்டை,ஊராட்சி அலுவலகம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டும், அங்கன்வாடி மையம் அருகே பழைய அலுவலக கட்டடம் இடிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆர்கே.பேட்டை ஒன்றியம், ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில், ஊராட்சி அலுவலக கட்டடம் பழுதடைந்தது. அதனருகே, ஊராட்சி அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையமும் கட்டப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தில், 25 குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி மையத்தை ஒட்டியுள்ள ஊராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடம் இடிக்கப்படாமல் உள்ளதால், குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடம் சேதமடைந்து, கான்கிரீட் உதிர்ந்து வருகிறது. இதற்கு மாற்றாக, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தும், பழைய கட்டடம் இடிக்கப்படாமல் உள்ளது.எனவே, பழைய கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.