இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது திருத்தணி நகராட்சியில் தாமதம்
திருத்தணி:திருத்தணி நகராட்சியில் ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில், வீடுகள் கட்டியுள்ளவர்களுக்கு பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பயனாளிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். திருத்தணி நகராட்சியில் பெரும்பாலானோர் மலைப்பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்காததால், அரசு நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆறுமாதத்திற்கு முன் முதல்வர் ஸ்டாலின் ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில், குறைந்த பட்சம், 5 ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம் என அறிவித்தார். இதையடுத்து, நகராட்சியில் மலைபுறம்போக்கு, பாறை புறம்போக்கு, அனாதீனம் ஆகிய இடங்களில் வீடுகள் கட்டி வசிப்பவர்கள் குறித்து வருவாய் துறை யினர் கணக்கெடுத்தனர். இதில், அமிர்தாபுரம், இந்திராநகர், அக்கையநாயுடு தெரு, நேருநகர், வள்ளிநகர், பெரியார்நகர் ஆகிய பகுதிகளில், 2,000 குடும்பத்தினர் புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி, பல ஆண்டுகளாக வசித்து வருவது தெரியவந்தது. கடந்த மார்ச்-ஏப்ரல் மாதத்தில், மேற்கண்ட பயனாளிகளிடம் இருந்து இலவச பட்டா வழங்க விண்ணப்பம் பெறப்பட்டது. பின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 130 பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படாமல் வருவாய் துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.