மேலும் செய்திகள்
இருளில் மூழ்கிய சென்னை
13-Sep-2024
பொன்னேரி:சோழவரம் அடுத்த ஜெகநாதபுரம் பகுதியில் வசித்தவர் நாகராஜ், 45. லாரி ஓட்டுனர். கடந்த 1ம் தேதி, வடசென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் நிலையத்தில் சாம்பல் கழிவுகளை ஏற்றி வருவதற்காக லாரியுடன் சென்றார். அப்போது சாம்பல் கழிவுகள் செல்லும் கால்வாயில், அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.வடசென்னை அனல் மின் நிலைய நிர்வாகம் அளித்த தகவலின்படி அனல் மின் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், சாம்பல் கால்வாயில் நாகராஜை தேடினர். இதுவரை நாகராஜ் பற்றிய எந்த தகவலும் தெரியவராததால், ஜெகநாதபுரம் ஊராட்சி தலைவர் மணிகண்டன் தலைமையிலான கிராம மக்கள், 30 பேர் நேற்று வடசென்னை அனல் மின் நிலைய இரண்டாம் நிலைய நுழைவாயில் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தகவல் அறிந்து சென்ற பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விபரம் கேட்டறிந்தார். தொடர்ந்து அனல் மின் நிலைய நிர்வாகத்திடம் பேசினார். இரு நாட்களில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைத்து நாகராஜை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என எம்.எல்.ஏ., தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
13-Sep-2024