யில்வே கேட் பராமரிப்பு வரும் 9 வரை நீட்டிப்பு
திருத்தணி:திருத்தணி மேட்டுத்தெரு மற்றும் பஜார் பகுதி ஆகிய இடங்களில், தானியங்கி ரயில்வே கேட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில், இரண்டாவது கேட்டான பஜார் கேட் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த கேட் வழியாக அரசு அலுவலகங்கள், அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட நகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சென்று வருகின்றனர்.இந்நிலையில், ரயில்வே கேட் பாதை சீரமைப்பு, புதிதாக தண்டவாளங்கள் பொருத்துதல் மற்றும் தண்டவாளங்களுக்கு இடையே சிமென்ட் தூண்கள் அமைக்கும் பணிகள், கடந்த 9ம் தேதி முதல் நடந்து வருகின்றன.இப்பணிகள் நேற்று முன்தினம் முடிவடையும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், பணிகள் நிறைவு பெறாததால், வரும் 9ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டாவது ரயில் கேட் வழியாக வாகனங்கள் செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மேட்டுத் தெரு கேட் வழியாக மாற்று பாதையில் செல்லுமாறு, வாகன ஓட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.