பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்
ஊத்துக்கோட்டை,பழமை வாய்ந்த கோவில் மற்றும் போக்குவரத்து மிகுந்த இடங்களில் வைத்துள்ள 'சிசிடிவி' கேமராக்கள் பழுதடைந்துள்ளதால், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று பெரியபாளையம் பவானியம்மன் கோவில். இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர். இங்கு நடைபெறும் விழாக்களில் ஆடி மாத விழா பிரசித்தி பெற்றது. முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதுபோன்ற விழாக்களில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி, பொங்கல் வைத்தல், அலகு குத்தி நேர்த்திக்கடன்களை செலுத்துவர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பெரியபாளையம் வரும் நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக நெரிசல் ஏற்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவர். குற்றவாளிகள் மற்றும் விபத்து குறித்து கண்டறிவதற்காக, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. அரசு மேல்நிலைப் பள்ளி, பஜார், வடமதுரை கூட்டுச்சாலை உள்ளிட்ட இடங்களில், 30க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில், வடமதுரை கூட்டுச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பழுதடைந்துள்ளன. எனவே, ஆடி மாதம் துவங்கியுள்ள நிலையில், அதிகளவு மக்கள் கோவிலுக்கு வருவதால், அசம்பாவிதங்கள் குறித்து கண்டறிய, மாவட்ட எஸ்.பி., உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.