பிரிஜ் வெடித்து தீ விபத்து மளிகை கடை எரிந்து நாசம்
புழல்: 'பிரிஜ்' சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், மளிகை கடை முழுதும் தீக்கிரையானது. புழல், பத்மாவதி நகர் பிரதான சாலையில் விஜயகுமார், 65, என்பவர், மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல, நேற்று காலை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடையில் இருந்த 'பிரிஜ்'ஜின் சிலிண்டர் வெடித்து தீப்பொறி ஏற்பட்டது. சற்று நேரத்தில் மளமளவென தீ கடையில் இருந்த பொருட்கள் மீதும் பரவியது. அப்பகுதி குடியிருப்புவாசிகள், கடைக்காரர்கள் இணைந்து தீயை அணைக்க முற்பட்டும் முடியவில்லை. அந்நேரம் விரைந்து வந்த கொளத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.