உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பெரியபாளையத்தில் பேனர் அதிகரிப்பு :கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

 பெரியபாளையத்தில் பேனர் அதிகரிப்பு :கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

ஊத்துக்கோட்டை: அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், அரசியல் கட்சியினர் அதை பொருட்படுத்தாமல் பேனர்கள் வைத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பெரிய அளவிலான பேனர்கள் கீழே விழுந்ததில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் இதை பொருட் படுத்தாமல், சாலை சந்திப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பெரிய அளவில் பேனர் வைப்பது தொடர்ந்து நிகழ்கிறது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அமைந்துள்ளது. இங்கு, புகழ் பெற்ற பவானியம்மன் கோவில் உள்ளது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர். மேலும், இந்த வழித்தடத்தில் தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பெரியபாளையம் ஆரணி ஆற்றின் மேம்பாலத்தை கடக்கும் முன் உள்ள சாலை மற்றும் வளைவுகள், பேருந்து நிலையம் ஆகியவற்றில் பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதால், விபத்து அபாயம் உள்ளது. மாவட்டம் முழுதும் இதே நிலை தான் தொடர்கிறது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், உடனே கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி