உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளிப்பட்டில் சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் தீவிர ரோந்து

பள்ளிப்பட்டில் சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் தீவிர ரோந்து

பள்ளிப்பட்டு:நொச்சிலி காப்புக்காடு ஒட்டிய வயலில் சிறுத்தை பதுங்கி இருந்ததாக விவசாயிகள் தெரிவித்ததை அடுத்து, வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டுள்ளனர்.பள்ளிப்பட்டு அடுத்த நொச்சிலி பகுதியில், 1,000 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காட்டில் ஏராளமான மான்களும், மயில்களும் வசித்து வருகின்றன.நொச்சிலி அடுத்த காப்பூர் கண்டிகையில் வனவிலங்குகளுக்காக குடிநீர் தொட்டியும் வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காப்பூர் கண்டிகை கிராமத்தை ஒட்டிய வயல்வெளியில் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக அறுவடை இயந்திரத்துடன் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும் வயலில் அறுவடையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நெல்வயலில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென அங்கிருந்து வனப்பகுதிக்கு ஓடியதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து பள்ளிப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு முழுதும் காப்புக்காடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறுத்தையை கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்கான எந்தவொரு தடயமும் காணப்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் யானை, சிறுத்தைகள் வசித்து வருகின்றன. சேஷாச்சலம் வனப்பகுதியில் இருந்து ராயலசெருவு, கார்வேட்நகரம் வனப்பகுதி, புல்லுார் காப்புக்காடு என பள்ளிப்பட்டு வரை நீண்ட மலைத்தொடராக அடர்ந்த காடு தமிழகம் வரை பரவியுள்ளது. இதனால், ஆந்திர மாநில காடுகளில் இருந்து சிறுத்தை ஊடுருவி இருக்குமோ என்ற அச்சம் நொச்சிலி பகுதி மக்களிடையே நிலவி வருகிறது. ஏற்கனவே காட்டுப்பன்றிகளால் பயிர்கள் நாசம் ஆகி வருகின்றன. தற்போது சிறுத்தை வருகையால் வயல்வெளிக்கு செல்லவே பயமாக உள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !