சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 28 ஆண்டு சிறை
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 28 ஆண்டு சிறை தண்டனையும், 28,000 ரூபாய் அபராதமும் விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்தவர் அன்பு என்ற அன்பழகன், 30. இவர், கடந்த 2016 மார்ச் 22ம் தேதி, வீட்டருகே இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதுகுறித்து, சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்படி, திருவள்ளூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். நேற்று நடந்த விசாரணையில், நீதிபதி உமா மகேஸ்வரி வழங்கிய தீர்ப்பில், குற்றவாளிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், 28,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார், அன்பழகனை புழல் சிறையில் அடைத்தனர்.