குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட போலீசிடம் இருந்து தப்பியவர் சிக்கினார்
செம்மஞ்சேரி, குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட, போலீசிடம் இருந்து தப்பிய கைதி, மீண்டும் கைது செய்யப்பட்டார். சோழிங்கநல்லுார், வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெல்சன், 35. சில நாட்களுக்கு முன், இவரது இருசக்கர வாகனம் திருடு போனது. செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், சோழிங்கநல்லுார் ஏரிக்கரையை சேர்ந்த வினித்குமார், 28, சரவணகுமார், 27, ஆகியோர், வாகனத்தை திருடியது தெரிந்தது. இவர்கள் மீது, ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை, இருவரையும் கைது செய்த போலீசார், மருத்துவ பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்தனர். இதற்காக, இரவு 8:00 மணிக்கு, மூன்று போலீசார், இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனைக்கு காத்திருந்த போது, போலீசாரின் பிடியில் இருந்து வினித்குமார் தப்பினார். அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிய போலீசார், எங்கும் கிடைக்காததால், உயர் அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர். பின், சரவணகுமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, சோழிங்கநல்லுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் தனிப்படை அமைத்து, வினித்குமாரை தேடினர். விசாரணையில், மதுராந்தகத்தில் வசிக்கும் அவரது தங்கை வீட்டில், வினித்குமார் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. அதன்படி, நேற்று மதுராந்தகம் சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த வினித்குமாரை கைது செய்து, மருத்துவ பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியது குறித்து போலீசாரிடம் வினித்குமார் கூறியதாவது: குடும்பத்தார் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த தீபாவளிக்கு அவர்களுடன் இருப்பதாக சத்தியம் செய்திருந்தேன். கையில் பணம் இல்லாததால், பைக் திருடினேன். தீபாவளி முடிந்த பின் தான், போலீசிடம் சிக்குவேன் என நம்பினேன். அதற்குள் பிடிபட்டு விட்டேன். குடும்பத்திற்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியவில்லையே என, வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.