உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிக்கு எம்.எல்.ஏ., டோஸ்
திருத்தணி: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை முறையாக நடத்தாத ஒன்றிய அதிகாரியை, தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் கடிந்து கொண்டார். திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சி, வள்ளியம்மாபுரம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி வளாகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது. திருத்தணி தாசில்தார் குமார் தலைமையில் நடந்த முகா மில், 15 துறை அலுவலர்கள் பங்கேற்றனர். திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். அப்போது, முகாமிற்கு வந்த பெண்கள் மற்றும் முதியோர் விண்ணப்பம் பெறவும், அதை சம்மந்தப்பட்ட துறை அலுவலர் களிடம் சமர்ப்பிக்க சிரமப் பட்டதையும் பார்த்த எம்.எல்.ஏ., சந்திரன் கொதிப்படைந்தார். பின், ஒன்றிய அதிகாரியிடம், ''தன்னார்வலர்கள் எங்கே உள்ளனர். ஏன் நியமிக்கவில்லை. இது தான் நீங்க முகாம் நடத்தும் லட்சணமா?'' என, எம்.எல்.ஏ., சந்திரன் கடிந்து கொண்டார். தொடர்ந்து, எம்.எல்.ஏ., அனைத்து துறை பிரிவுகளிலும் ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டார். அப்போது, வள்ளியம்மாபுரம் பகுதி மக்கள், 'எங்கள் பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் கடும் சிரமப்படுகின்றனர்' என, தெரிவித்தனர். உடனடியாக, அரசு போக்குவரத்து பணிமனை மேலாளரை அழைத்து, ''நகர பேருந்தை நாளை முதல் இயக்க வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., சந்திரன் உத்தரவிட்டார். முகாமில், 350க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.