மூடிய ரயில்வே கேட்டை கடக்கும் வாகன ஓட்டிகள்
திருவாலங்காடு:திருவாலங்காடு ரயில் நிலையத்தையொட்டி, வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் மூடிய ரயில்வே கேட்டை கடந்து வருகின்றனர். சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தில் தினமும் 300க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. தண்டவாளத்தை கடந்தால், கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலைக்கு செல்லலாம். இந்த கேட், 10 - 20 நிமிடங்களுக்கு ஒருமுறை திறக்கப்படுகிறது. சில அவசரக்கார இருசக்கர வாகன ஓட்டிகள், ஆபத்தை உணராமல் மூடிய கேட்டை கடந்து செல்கின்றனர். இச்சமயத்தில், ரயில் வந்தால் உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விபத்தை தடுக்க திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.