போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை பருத்திபட்டு வாகன ஓட்டிகள் அவதி
ஆவடி:ஆவடி அடுத்த திருவேற்காடு, சுந்தரசோழபுரம், பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பருத்திப்பட்டு -- திருவேற்காடு பிரதான சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இச்சாலையில் மின்விளக்குகள் இருந்தும் பயனில்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் திகில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.இதை பயன்படுத்தி குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளதால், இரவில் பருத்திப்பட்டு - திருவேற்காடு சாலையை பயன்படுத்துவதை வாகன ஓட்டிகள் தவிர்த்து வருகின்றனர்.பருத்திப்பட்டு -- திருவேற்காடு சாலையை ஒட்டி, தனியார் பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ளதால், தினமும் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.'பிக் ஹவர்ஸ்' நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகளை எரிச்சல் அடைய செய்துள்ளது. எனவே, பருத்திப்பட்டு -- திருவேற்காடு சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்து, மின்விளக்குகள் முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.