17 ஆண்டாக பதவி உயர்வு இல்லை முருகன் கோவில் பணியாளர்கள் மனு
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் 29 உபக்கோவில்களில், 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் திருத்தணி கிளை சார்பில், நேற்று முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோரிடம், சங்க தலைவர் குப்பன் கோரிக்கை மனு அளித்தார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:முருகன் கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படாமல் உள்ளதால், பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பணி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு வழங்கியும், 36 பணியாளர்களுக்கு பணப்பலன் வழங்கவில்லை. பணியாளர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணியாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற கோவில் இணை ஆணையர் ரமணி, 'மனு மீது பரிசீலனை செய்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.