உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்வாய் ஓரம் குப்பை கொட்டாதீர்கள் அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்

கால்வாய் ஓரம் குப்பை கொட்டாதீர்கள் அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்

ஈக்காடு: பூண்டியில் இருந்து புழல் செல்லும் கால்வாய் ஓரம் குப்பை கொட்ட வேண்டாம் என, நீர்வளத்துறையினர் அறிவிப்பு பலகை அமைத்து, வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர், கொசஸ்தலை ஆற்றுநீர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருகிறது. இங்கு சேகரமாகும் தண்ணீர் கால்வாய் வாயிலாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பூண்டி - புழல் கால்வாய் வழியில் ஈக்காடு கிராமம் அமைந்துள்ளது. கால்வாய் ஓரம் வசித்து வரும் மக்கள், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை, திருவள்ளூர் - செங்குன்றம் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் உள்ள பகுதியில் கொட்டி வருகின்றனர். மேலும், அருகில் உள்ள கடைக்காரர்கள், கோழி இறைச்சி கழிவுகளையும் இந்த கால்வாய் அருகில் குவித்துள்ளனர். கால்வாய் கரையில் குவிந்துள்ள குப்பை தண்ணீருக்குள் விழுவதால், புழல் ஏரிக்கு செல்லும் குடிநீர் மாசடைந்து வருகிறது. இதையடுத்து, நீர்வளத் துறையினர், ஈக்காடு அருகில் கால்வாய் கரையில் குப்பை கொட்டாதீர் என, அறிவிப்பு பலகை வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !