செயல்படாத நுாலகம் பெற்றோர் அதிருப்தி
பள்ளிப்பட்டு: அரசு பள்ளி அருகே செயல்படாமல், பாழடைந்து வரும் ஊராட்சி நுாலகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிப்பட்டு ஒன்றியம் கொத்தகுப்பம் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தை ஒட்டி நுாலகமும், விளையாட்டு திடலும் அமைந்துள்ளன. பள்ளி வளாகத்தில் இருந்து நுாலகத்திற்கு மாணவர்கள் சென்றுவர வசதியாக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக மாணவர்கள், விளையாட்டு திடல் மற்றும் நுாலகத்திற்கு சென்று வந்தனர். இந்த நுாலகம் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டு பாழடைந்துள்ளது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் அதிருப்தி அடைந்துள்ளனர். நாளிதழ் படிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக, நுாலகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.