நாறும் நகராட்சி பஸ் நிலையம் பூந்தமல்லியில் பயணியர் அவதி
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பூந்தமல்லியை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். பூந்தமல்லி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பேருந்து நிலையம், பராமரிப்பின்றி சீரழிந்த நிலையில் உள்ளது.பேருந்து நிலையத்தின் உள்ளே கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இலவச கழிப்பறை மூடியே கிடப்பதால், பயணியர் பேருந்து நிலைய வளாகத்தில், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.இதனால், பேருந்து நிலைய வளாகம் முழுதும் துர்நாற்றம் வீசுவதால் பயணியர் வேதனைக்கு உள்ளாகின்றனர்.பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர், பேருந்து நிலையத்தில் தினமும் குப்பையை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.