உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள்: ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள்: ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை பகுதியில், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை கால்நடைகள் உண்பதால், உடல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக, கால்நடை வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர். திருவாலங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், ராஜபத்மாபுரம், திருவாலங்காடு, கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவில் கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளன. ஊராட்சி நிர்வாகங்கள் குப்பை கழிவுகளை அகற்றுவதில் மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றன; அதற்கான தொழிலாளர்களும் இல்லை. பொது இடங்களிலும், தெருவோரங்களிலும் துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன. காய்கறி மற்றும் உணவு கழிவுகள் பிளாஸ்டிக் கவரில் போட்டு துாக்கி வீசப்படுகின்றன. சின்னம்மாபேட்டை கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் உள்ள குப்பை, பல மாதங்களாக தரம்பிரித்து அகற்றாததால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் அதை உண்ணுகின்றன. மேலும், குப்பையில் கொட்டப்பட்ட உணவு பொருட்கள், பழங்கள் வாசனையால் ஈர்க்கப்படும் கால்நடைகள், அவற்றை உண்ணும் போது, அதனுடன் பிளாஸ்டிக் பைகளும் வயிற்றுக்குள் செல்கின்றன. இவற்றை உட்கொள்ளும் கால்நடைகளின் குடலில் கழிவுகள் தேங்கி, உணவு உட்கொள்ள முடியாமல் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. இது, விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் பராமரிக்க அரசு முன்வர வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ