உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆசிரியர்களுக்கு பி.எல்.ஓ., பணி மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்

ஆசிரியர்களுக்கு பி.எல்.ஓ., பணி மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்

திருவாலங்காடு: ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் என்ற பி.எல்.ஓ., பணிகளில் ஆசிரியர்களை நியமித்துள்ளதால், மாணவர்களின் கற்பித்தல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. திரு வள்ளூர் மாவட்டத்தில் பி.எல்.ஓ., பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் தேசிய வாழ்வாதார திட்ட ஊழியர்கள் போன்றோரை ஈடுபடுத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. தற்போது மாவட்டத்தில் உள்ள 944 துவக்கப் பள்ளிகள், 265 நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களும், பி.எல்.ஓ., பணிகளில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, பி.எல்.ஓ. பணியில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மீண்டும் அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், கற்பித்தல் பணிகளில் தேக்கம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, திருவாலங்காடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கிராமப்புறங்களில், பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில் பி.எல்.ஓ. பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான கிராமப்புற பள்ளிகள், 'ஈராசிரியர்' பள்ளிகளாகவே உள்ளன. அதில், ஒரு ஆசிரியர் பி.எல்.ஓ., பணிக்கு சென்றுவிட்டால், மீதமுள்ள ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியர்களின் பணியையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளிகளில் ஏற்கனவே நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களை திறன், 'ஸ்லாஸ்' போன்ற சிறப்பு தேர்வுகளுக்கு தயார்படுத்தும் பணிச்சுமை ஆகியவற்றுக்கு இடையில், தற்போது கூடுதல் பணியையும் ஆசிரியர்களுக்கு வழங்குவதால், கற்றல் பணி நிச்சயமாக பாதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை