மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆர்.கே.பேட்டையில் சோதனை முயற்சி
திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை வட்டத்தில் உள்ள 17 கிராமங்களில். 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பிற்கான சோதனை முயற்சி நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில், 2027ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்மாதிரி சோதனை நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான சோதனை முயற்சியை, தமிழக அரசுடன் கலந்தாலோசித்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே.பேட்டை வட்டம் வெள்ளாத்துார், வங்கனுார், ஸ்ரீகாளிகாபுரம், சந்தான வேணுகோபாலபுரம் உட்பட 17 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கல்வி, வருவாய், சுகாதாரம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பல்வேறு துறை அலுவலர்கள் கள பணியில் ஈடுபடுவர். முதல்கட்டமாக, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான சோதனை முயற்சி, வரும் 10 - 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை வட்டத்தில் கணக்கெடுப்பு எடுக்கப்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், கள பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.