நிழற்குடை இல்லாமல் புதுவாயல் பயணியர் தவிப்பு
கும்மிடிப்பூண்டி:சென்னை- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே புதுவாயல் சந்திப்பு உள்ளது. அங்கு, ஆந்திரா, சென்னை மற்றும் பெரியபாளையம் நோக்கி செல்லும் மூன்று சாலைகள் சந்திக்கின்றன.சிறுவாபுரி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், பள்ளி, கல்லுாரிகள் செல்பவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பேருந்து பயணியர், மூன்று திசை சாலைகளிலும் காத்திருந்து பேருந்து பிடித்து செல்வது வழக்கம்.பரபரப்பாக காணப்படும் அந்த சந்திப்பில், பயணியர் நிழற்குடை ஒன்று கூட இல்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள், சாலையோரம் நின்றபடி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மழையிலும் வெயிலிலும் பேருந்து பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.பேருந்து பயணியரின் நலன் கருதி, அந்த இடத்தில், மூன்று திசைகளிலும் பயணியர் நிழற்குடைகள் நிறுவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.