கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணி
கடம்பத்துார்: கடம்பத்துாரில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பகுதி மக்கள் ஆபத்தான முறையில் கடவுப் பாதையை கடந்து சென்று வருகின்றனர். சென்னை -- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ரயில் நிலையம். இப்பகுதி வாசிகளின் கோரிக்கையை அடுத்து, கடந்த 2015ல் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பால பணி ஆறு ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்து, 2022ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதால், கடந்த 2022 டிசம்பரில், 5.50 கோடி ரூபாய் மதிப்பில், 300 அடி நீளம் 16 அடி அகலம், 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்த நிலையில், தற்போது சுரங்கப்பாதை பணிகள் மூன்று ஆண்டுகளாகியும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, ரயில்வே துறையினர் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கடம்பத்துார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.