பழவேற்காடு மீன் இறங்குதளத்தில் குவியும் கழிவுகளை அகற்ற கோரிக்கை
பழவேற்காடு:பழவேற்காடு மீனப் பகுதியில், 35 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். பைபர் படகுகளில் சென்று மீன்பிடித்து கரை திரும்பும் மீனவர்கள், பழவேற்காடு பாலம் அருகே, ஏரிக்கரையை ஓட்டி இருக்கும் இறங்குதளத்திற்கு அவற்றை கொண்டு வருகின்றனர். பின், மீன் ஏலக்கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஒரு சில மீன்கள் விற்பனைக்கு உகந்தது இல்லை என்பதால், அவை இறங்குதளம் பகுதியில் துாக்கி வீசுப்படுகின்றன.அதேபோன்று, மீன் மார்க்கெட்டின் கழிவுகளும், இறங்குதளம் பகுதியில் ஆங்காங்கே குவித்து வைக்கப்படுகிறது. கடந்த மாதம் பெய்த மழையால் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து, பாசி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளும், கரையில் திட்டு திட்டாக குவிந்து கிடக்கின்றன.குப்பை கழிவுகளை அவ்வப்போது அகற்றாமல், மீன் இறங்குதளம் வளாகம் சுகாதாரமற்று இருக்கிறது. இது மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், சுற்றுலாப் பயணியர், மீன் வியாபாரிகள், மீனவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.மீன் இறங்குதளம் வளாகத்தினை பராமரிக்க, அங்குள்ள கடைகள், வியாபாரிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை வாயிலாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.அவற்றை கொண்டு பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.