பெத்திக்குப்பம் - ஈகுவார்பாளையம் சாலை விரிவாக்க பணிக்கு ரூ.19 கோடி ஒதுக்கீடு
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், பெத்திக்குப்பம் சந்திப்பில் இருந்து ஈகுவார்பாளையம் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய, 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில் இருந்து, மாதர்பாக்கம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த சாலையில், மாதர்பாக்கம் அருகே புதிதாக வர உள்ள மாநெல்லுார் சிப்காட் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் இருந்து ஈகுவார்பாளையம் வரையிலான சாலையை, நான்கு வழியாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ஈகுவார்பாளையத்தில் இருந்து நாகராஜகண்டிகை, காயலார்மேடு வழியாக, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பெத்திக்குப்பம் சந்திப்பு வரையிலான, 6.2 கி.மீ., சாலை, 5.5 மீட்டர் அகலம் கொண்ட குறுகிய சாலையாக உள்ளது. இதனால், எதிர் எதிரே இரு கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பல நேரங்களில், அச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து, அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட, 6.2 கி.மீ., சாலையை விரிவாக்கம் செய்ய, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள, 5.5 மீட்டர் அகல சாலையை, 10 மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வடகிழக்கு பருவமழை முடிந்ததும், சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, காயலார்மேடு மற்றும் நாகராஜகண்டிகை கிராம பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், விரைவில் அகற்றப்பட உள்ளன. சாலையை விரிவாக்கம் செய்ததும், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மாநெல்லுார் சிப்காட் வளாகம் வரை, போக்குவரத்து இடையூறு இன்றி, கனரக வாகனங்கள் எளிதாக சென்று வரலாம் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.