கற்கள் பெயர்ந்த ஏரிக்கரை சாலை ஆறு கிராமவாசிகள் கடும் அவதி
கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவிகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெண்மனம்புதுார் ஏரிக்கரை வழியாக வெண்மனம்புதுார், செஞ்சி பானம்பாக்கம், காரணி, விடையூர் மற்றும் ராமன்கோவில் செல்லும் பகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.இந்த ஏரிக்கரை சாலை, ஐந்தாண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. ஆனால், பேருந்து நிறுத்தத்திலிருந்து 200 மீ., துாரமுள்ள சாலை மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், இந்த சாலை கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை கடம்பத்துார் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் வெண்மனம்புதுார் ஏரிக்கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆறு கிராம பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.