உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 70 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் இல்லாத திருவாலங்காடு அரசு மேல்நிலை பள்ளி

70 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் இல்லாத திருவாலங்காடு அரசு மேல்நிலை பள்ளி

திருவாலங்காடு:திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி 1951ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக துவங்கி, 1980ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இப்பள்ளி, 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பள்ளி துவங்கியதில் இருந்து சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. தற்போது, முகப்பு பகுதியில் மட்டும், 400 மீட்டர் நீளத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த சுற்றுச்சுவரை, 2002ல் தலைமையாசிரியராக பணிபுரிந்தவர் நன்கொடையாக பெற்று கட்டியதாக கூறப்படுகிறது. அரசிடம் 70 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.தற்போது, பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், தனிநபர்கள் நடமாட்டம் உள்ளதுடன், சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் மது அருந்துவதும், கட்டடத்தை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர். மேலும், மாணவர்களுக்கு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வினியோகிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி கட்டடத்திற்கு பின்புறம் வரும் 'ரோமியோ'க்கள், மாணவியருக்கு காதல் தொல்லை தருகின்றனர். மாணவியர் கழிப்பறைக்கு செல்லும் பகுதியில் வெளியாட்கள் நின்று கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை தருகின்றனர்.இங்கு நிற்பவர்கள் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததே இதற்கு காரணம். இதை தடுக்க சுற்றுச்சுவர் அமைப்பது மட்டுமே தீர்வு. கடந்தாண்டு திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ