உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சந்தைக்கு நிரந்தர கட்டடம் தேவை திருவாலங்காடு மக்கள் வலியுறுத்தல்

சந்தைக்கு நிரந்தர கட்டடம் தேவை திருவாலங்காடு மக்கள் வலியுறுத்தல்

திருவாலங்காடு:நெடுஞ்சாலையில் நடக்கும் வாரச்சந்தையை இடம் மாற்றி, நிரந்தர கடைகள் அமைக்க வேண்டும் என, சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியத்தில் சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில், வாரந்தோறும் காய்கறி சந்தை அமைக்கப்படுகிறது. திருவாலங்காடில், திருவள்ளூர் -- அரக்கோணம் மற்றும் சின்னம்மாபேட்டையில் தக்கோலம் ---- கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலையை ஒட்டி, 250க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைத்து, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இச்சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும். இந்நிலையில், சாலையோரம் கடைகள் அமைப்பதால், பொருட்கள் வாங்க வருவோர், தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு போதிய இடமிருப்பதில்லை. மேலும், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என, அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகம், வாரச்சந்தைக்கு நிரந்தர கட்டடம் அமைத்தால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர். எனவே, வாரச்சந்தைக்கு நிரந்தர கட்டடம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ