சிறுவன் கடத்தல் வழக்கில் மூவருக்கு ஜாமின்
திருவள்ளூர்:திருவாலங்காடு பகுதியில் காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உட்பட மூவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை, ஏப்ரல் 15ம் தேதி, காதல் திருமணம் செய்தார். இந்நிலையில் விஜயஸ்ரீ தந்தை வனராஜ் தரப்பினர், தனுஷின் 17 வயது தம்பியை ஜூன் 7ம் தேதி ஏ.டி.ஜி.பி., ஜெயராம் பயன்படுத்தும் காரில் கடத்தி சென்றனர். இந்த வழக்கில் விஜயஸ்ரீ தந்தை வனராஜ், விருப்பு ஓய்வு பெற்ற காவலர் மகேஸ்வரி, புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார், கணேசன், மணிகண்டன், குமார், டேவிட் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வனராஜ், கணேசன், மணிகண்டன் ஆகிய மூவரும் ஜாமின் கேட்டு திருவள்ளூர் ஒன்றாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் மூன்று பேருக்கும், நேற்று முன்தினம் மாலை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிறையில் உள்ள ஓய்வு பெற்ற காவலர் மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் ஆகியோர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை, வரும் 14ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது.