திருத்தணி அரசு கல்லுாரியில் குடிநீர் தட்டுப்பாடால் அவதி
திருத்தணி:திருத்தணி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, போதிய குடிநீர் வசதியில்லாததால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். திருத்தணி ஒன்றியம் மேதினாபுரம் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, இளங்கலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி போன்ற பட்டப் படிப்புகள் உள்ளன. இக்கல்லுாரியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கல்லுாரியில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு மூலம், மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் மட்டும் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் கிடைக்கிறது. மற்ற நேரங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், மாணவ - மாணவியர் தவித்து வருகின்றனர். கல்லுாரி நிர்வாகம் பலமுறை குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் ஆய்வு செய்து, கல்லூரிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.