ரிட்டன் டிக்கெட் வழங்க ரயில் பயணியர் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, சூளூர்பேட்டை வரை, தினமும் 15 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மார்க்கத்தில், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டியை கடந்து, தமிழக எல்லைக்கு உட்பட்ட எளாவூர் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய இரு ரயில் நிலையங்கள் உள்ளன.இந்த இரு ரயில் நிலையங்களிலும், தினமும் நுாற்றுக்கணக்கானோர் புறநகர் மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர். அங்குள்ள டிக்கெட் கவுன்டர்களில், 'ரிட்டன் டிக்கெட்' தரும் வசதி ஏற்படுத்தப்படாமல் இருப்பதால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எளாவூர், ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து, ரயிலில் சென்னை சென்று திரும்பும் பயணியர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் காத்திருந்து, டிக்கெட் பெற்றுவர வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பயணியரின் சிரமம் கருதி, இந்த இரு ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில், ரிட்டன் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.