வடாரண்யேஸ்வரர் கோவிலில் கழிப்பறை இடித்ததால் அவதி
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.பக்தர்கள் இயற்கை உபாதையை கழிக்க வசதியாக, கோவில் எதிரே கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் இரண்டு நாட்களுக்கு முன், இந்த கழிப்பறை கட்டடத்தை இடித்து அகற்றும் பணி நடக்கிறது.மாற்று வசதி ஏற்படுத்தாததால், பக்தர்கள் இயற்கை உபாதையை கழிக்க இடமின்றி சிரமப்படுகின்றனர். கோவில் நிர்வாகம் தற்காலிகமாக மாற்று கழிப்பறை வசதி ஏற்படுத்தாமல், இடித்து அகற்றியது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, பக்தர்களின் நலன் கருதி, மாற்று கழிப்பறை வசதி ஏற்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.