பாதுகாப்பு இல்லாத அரசு பள்ளிகள் சமூக விரோதிகள் அட்டகாசம்
ஆர்.கே.பேட்டை:இரவு காலவலர்கள் இல்லாத அரசு பள்ளிகளில், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது இடமாக மாற்றி வருகின்றனர். இதனால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், அரசு உயர்நிலை மற்றம் மேல்நிலை பள்ளிகளில் இரவு காவலர்கள் இல்லாத பள்ளிகளில், சமூக விரோதிகள் இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் சென்று மது அருந்தி வருகின்றனர். இவர்களால், பள்ளி வளாகம் அசுத்தமடைந்து வருகிறது.அங்கு குவிந்துள்ள மதுபாட்டில் மற்றும் பிளாஸ்டிக் குப்பையால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகம் சுளிக்கின்றனர்.குறிப்பிட்ட சில பள்ளிகளில் தோட்டக்காரர் மற்றும் துாய்மை பணியாளர்களும் இல்லாத நிலையில், குப்பையை அகற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர், பள்ளியில் உள்ள பொருட்களை உடைத்து நாசம் செய்கின்றனர்.இதனால், குடிநீர் குழாய், வகுப்பறை மின்சாதனங்கள், கதவு, ஜன்னல் உள்ளிட்டவை சேதமடைகின்றன.எனவே, ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் அரசு தொடக்க பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில், இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து, பகுதிவாசிகள் சமூக வலைதளங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.