அகரமேல் மூக்குத்தி குளத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
பூந்தமல்லி:பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சி, ஸ்ரீவாரி நகரில் மூக்குத்தி குளம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இந்த குளத்தை, தனியார் நபர்கள் சிலர் மண் கொட்டி மூடி ஆக்கிரமித்து இருந்தனர்.அதுமட்டுமின்றி, 40 சென்ட் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை, வீட்டு மனையாக பிரித்து விற்பனை செய்ய இருந்த நிலையில், கடந்த 2022ல் இந்த குளத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர்.அதன் பின், குளம் துார்வாரி ஆழப்படுத்தப்பட்டு, கம்பி வேலி அமைக்கப்பட்டது. தற்போது இந்த குளம் பராமரிப்பின்றி உள்ளது. இந்த குளத்தை சுற்றி, சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ”இந்த குளம் அருகே, 100க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, குளத்தை சீரமைத்து, நடைபாதை, பூங்கா அமைத்தால் வசதியாக இருக்கும்,” என்றனர்.