குளமாக மாறிய சிப்காட் சாலைகள் சிரமத்துடன் கடக்கும் வாகனங்கள்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட ஏ.ஆர்.எஸ்., சாலை எனப்படும் வடக்கு சிப்காட் சாலை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில், சிப்காட் நான்காவது குறுக்கு சாலை சந்திக்கும் இடத்தில், தொடர் மழையால் சாலை சேதமடைந்து, ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று அதிகாலை கனமழை பெய்ததால், அந்த சாலை பள்ளங்களில் மழை நீர் தேங்கி, அப்பகுதி முழுதும் குளங்கள் போல் காட்சியளிக்கின்றன. இதனால், அவ்வழியாக கடந்து செல்லும் இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை கடும் சிரமத்துடன் கடந்து வருகின்றன.அதேபோன்று, 23வது சாலை சந்திப்பில், மெகா பள்ளம் ஒன்று உள்ளது. மேலும் அந்த சாலையில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேற்கண்ட இரு பகுதிகளில் உள்ள பள்ளங்களில் எத்தனை முறை ஜல்லி, மண் குவித்து சமன் செய்தாலும், மீண்டும் பள்ளமாகின்றன.அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.***