உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கழிவுநீர் டேங்கர் லாரிகள் அத்துமீறல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

கழிவுநீர் டேங்கர் லாரிகள் அத்துமீறல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில், 20க்கும் மேற்பட்ட கழிவுநீர் சேகரிக்கும் டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளன. அதன் வாயிலாக, தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை, திருமழிசையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.ஆனால், வெகுதுாரம் மற்றும் அதற்காக ஆகும் செலவை எண்ணி, கும்மிடிப்பூண்டி பகுதியில், சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படும் கழிவுநீர் நேராக, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் கலக்கிறது.இதனால், மூன்று ஆண்டுகளாக தாமரை ஏரி மாசடைந்து, கழிவுநீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. மீன்கள் செத்து மிதப்பதும், மழைக்காலங்களில் நிரம்பி வழியும் தாமரை ஏரியின் கழிவுநீர், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் ஆறாக ஓடுவதும் ஆண்டுதோறும் வாடிக்கையாகி விட்டது.அத்துமீறும் டேங்கர் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தால், வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வதுடன், கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிப்பு நிலையம் துவங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதை, டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இதனால், அத்துமீறல்களை தடுக்க முடியாமல், அரசு துறையினரும் திணறி வருகின்றனர். எனவே, கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவரை, பாதுகாப்பாக கழிவுநீரை அப்புறப்படுத்த, டேங்கர் லாரி உரிமையாளர்களை அழைத்து அரசு தரப்பில் பேச்சு நடத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ