சுண்ணாம்புகுளம் போலீஸ் பூத் 24 மணி நேரம் செயல்படுமா?
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புக்குளம் கிராம பஜார் பகுதிக்கு, சுற்றியுள்ள ஏழு மீனவ கிராமங்கள் உட்பட, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் அன்றாட தேவைக்கு வந்து செல்லும் முக்கிய சந்தை பகுதியாக உள்ளது.ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புக்குளம் பகுதி, 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவசர தேவைக்கு போலீசார் வந்து செல்ல முடியாத துாரம் என்பதால், சுண்ணாம்புகுளம் பஜார் பகுதியில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், 18 ஆண்டுகளுக்கு முன், அங்குள்ள பேருந்து நிலையம் அருகே புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.முதல் நான்கு ஆண்டுகள், புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அப்போது, சுண்ணாம்புகுளம் பஜார் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. அதன்பின், புறக்காவல் நிலையம் பாழாகி போனதால், 12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.கடலோர பாதுகாப்பு ஒத்திகை, சுனாமி ஒத்திகை, அரசு விழாக்கள் போன்ற நேரங்களில் மட்டுமே புறக்காவல் நிலையம் திறக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் செயல்படாமல் இருப்பதால், சுண்ணாம்புக்குளம் பகுதியில், 'குடி'மகன்களின் அட்டகாசம், அடிதடி, தகராறு ஆகியவை அதிகரித்து அதிகரித்துள்ளது என, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். எனவே, சுண்ணாம்புக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமவாசிகளின் நலன் கருதி, புறக்காவல் நிலையத்தில் போதிய போலீசார் நியமித்து, 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.