விவசாய கிணறுகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் கூடுதல் மின்மாற்றிகள் பொருத்தும் பணிகள் சுறுசுறுப்பு
திருத்தணி:திருத்தணி கோட்டத்தில், 1.50 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இதில், 90,000 விவசாயிகள் தங்களது விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளனர். ஆனால், விவசாய மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் முறையாக வழங்காததால், பயிர்களுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து விடுகின்றன. இதையடுத்து, விவசாய கிணறுகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என, தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள், துணைமின் நிலையங்களில் இருந்து, விவசாய இணைப்புகளுக்கு மட்டும் தனியாக மின்பாதை அமைத்து, மும்முனை மின்சார வினியோகம் செய்வதற்கு புதிய முயற்சி எடுத்துள்ளனர். இதற்காக, கூடுதல் மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் மும்மராக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள எட்டு துணைமின்நிலையங்களில் இருந்து, விவசாய மின் இணைப்புகளுக்கு மட்டும் தனியாக மின்பாதை அமைத்து, 100, 63, 50, 25 மற்றும் 15 கி.வோ., கொண்ட மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, திருத்தணி கோட்ட மின்வாரிய உயரதிகாரி கூறியதாவது: விவசாய கிணறுகளுக்கு குறைந்தழுத்த மின்சாரம், அடிக்கடி மின் சப்ளை துண்டிப்பு மற்றும் மின்மாற்றிகள் பழுதாகி வருவதாக, தொடர்ந்து புகார் வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு, விவசாய கிணறுகளுக்கு தனி மின்பாதை அமைத்து மின்வினியோகம் செய்யப்படும். வரும் டிசம்பருக்குள் அனைத்து துணை மின்நிலையங்களில் தனி மின்பாதை அமைத்து, சீரான மின்சாரம் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய கிணறுகளுக்கு சீரான மின்சாரம் வழங்காமல், ஆறு மணி நேரம் மட்டுமே, மின்வாரியம் மும்முனை மின்சாரம் வழங்கி வருகிறது. குறைந்தழுத்த மின்சாரத்தில் மின்மோட்டார்கள் இயக்க முடிவதில்லை. விவசாய கிணறுகளுக்கு மட்டும் தனி மின்பாதை அமைப்பதால், நிம்மதியாக மின்மோட்டார்களை இயக்கலாம். - ஒய்.வேணுகோபால், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்.