மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில், மின்சாரம் பாய்ந்து பீஹார் மாநில தொழிலாளி உயிரிழந்தார். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் மஞ்சு, 50. கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை, தொழிற்சாலை படிகளில் இறங்கி வரும் போது கால் தடுமாறி, மின்சார இணைப்பு உள்ள பலகை மீது விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.