உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்று நடும் திட்டம் துவக்கம்
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார் முன்னிலையில், கலெக்டர் பிரதாப் மரக்கன்று நட்டு, திட்டத்தை துவக்கி வைத்தார்.அதன்பின், கலெக்டர் பேசியதாவது:திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது.'துாய்மை மிஷன்' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு அலுவலகங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள பொருட்கள் தரம் பிரித்து விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் நோக்கம், சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான முயற்சி. பணி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.