| ADDED : செப் 13, 2026 08:13 PM
திருத்தணி, செப். 14– குவாரியில் இருந்த சூப்பர்வைசர் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, நங்கவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 37. இவர், திருத்தணி ஒன்றியம், டி.சி.கண்டிகையில் இயங்கி வரும் கல் குவாரியில், சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கேண்டீனில் செல்வராஜ் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், 28, அவரது உறவினர் விஜய் ஆகிய இருவரும் தகராறு செய்தனர். மேலும், இருவரும் செல்வராஜை பீர் பாட்டிலால் தாக்கினர். இதை தடுக்க சென்ற, திருத்தணியை சேர்ந்த ஆனந்தன் என்பவரையும் தாக்கினர். இதில், செல்வராஜ் பலத்த காயமும், ஆனந்தன் லேசான காயமும் அடைந்தனர். இவர்கள், சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, ஜெகதீஷை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயை தேடி வருகின்றனர்.