உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராட்டுவது கடினம் :அ.தி.மு.க., மீன்வளத்துறை அமைச்சர் பேச்சு

கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராட்டுவது கடினம் :அ.தி.மு.க., மீன்வளத்துறை அமைச்சர் பேச்சு

திருத்துறைப்பூண்டி: ''கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை பாராட்டி பேசுவதென்பது மிகக்கடினமான செயல். அ.தி.மு.க., அரசு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செயல்படுத்துவதை கம்யூனிஸ்ட்கள் பாராட்டுவது பெருமைக்குரியது,'' என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் பேசினார். திருத்துறைப்பூண்டி யூனியன் காடுவா கொத்தமங்கலத்தில், தமிழக முதல்வர் அறிவித்த இலவச கிரைண்டர், ஃபேன், மிக்ஸி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கலெக்டர் முனியநாதன் தலைமையில் நடந்தது. விழாவில், திருத்துறைத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., உலகநாதன் பேசியபோது, ''முத்துப்பேட்டை லகூன் பகுதியை சுற்றுலாத்தலமாக தமிழக அரசு அறிவித்ததுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த தி.மு.க., ஆட்சியில், முத்துப்பேட்டையில் துறைமுகம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்து, கடைசி வரை அதற்கான பணி நடக்கவில்லை. தற்போது, ஐந்தாண்டுக்குள் துறைமுகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க., அரசு அறிவித்ததுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார். அதை தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் பேசியதாவது: தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த நலத்திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உயர்த்த ஆடு, மாடுகளும், வீட்டுக்கு தேவையான கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் இலவசமாக வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்திட்டமாக தாலிக்கு 4 கிராம் தங்கமும், படித்த பட்டதாரி மணப்பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயும், ப்ளஸ் 2 வரை படித்த மணப்பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. அரசுடைய திட்டங்கள் எவ்வித இடையூறும் இன்றி மக்களுக்கு நேரடியாக கிடைப்பதுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை பாராட்டி பேசுவதென்பது மிகக்கடினமான செயல். அ.தி.மு.க., அரசு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செயல்படுத்துவதை கம்யூனிஸ்ட்கள் பாராட்டுவது பெருமைக்குரிய விஷயமாகும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், 96 பயனாளிகளுக்கு இலவசத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார். பின்னர், பாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கும் 49 மாணவிகளுக்கு லேப்-டாப் கம்யூட்டர்களை அமைச்சர் வழங்கினார். நன்னிலம் எம்.எல்.ஏ., காமராஜ், திருத்துறைப்பூண்டி யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். காத்து கிடந்த கல்யாண பெண்கள்! திருத்துறைப்பூண்டி யூனியன் அலுவலகத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி யூனியன்களை சேர்ந்த 181 புதிய திருமணமான மணப்பெண்கள், அவர்களின் பெற்றோர், திருமண உதவித்தொகை பெற காலை 8 மணி முதல் காத்து கிடந்தனர்.காடுவா கொத்தமங்கலம் நிகழ்ச்சியை முடித்த பின்னர், அமைச்சர் யூனியன் அலுவலகம் வழியாக மதியம் ஒன்றே கால் மணிக்கு பாமணி சென்று, மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கிவிட்டு, நேரடியாக நாகப்பட்டினத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இதனால், காலை முதல் மதியம் வரை யூனியன் அலுவலகத்தில் காத்திருந்த புது மணப்பெண்கள், அவர்களின் பெற்றோர் ஏமாற்றமடைந்தனர். மதியத்துக்கு பின்னர், கலெக்டர் முனியநாதன், எம்.எல்.ஏ.,க்கள் உலகநாதன், காமராஜ் ஆகியேர் உதவித் தொகையை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ